Monday 11 November 2013

குப்பை பொறுக்கும் சிறுவர்கள்
புன்னகைப்பதில்லை.. 
அல்லது அது 
புன்னகையைப் போலிருப்பதில்லை..!

உடலினும் பெரிதான கோணிப்பை
சுமக்கும் அவர்களிடம்
ஒளிந்திருக்கிறது..!
கோணிப்பையினும் பெரிதான துயரம்..!

பரந்துப்பட்ட குப்பைவெளியில்
கிழிந்த வரைபடங்களையும்
சிதைந்த தெய்வச்சித்திரங்களையும்
கால்களால் விலக்கி
தமக்கான தேசத்தை கண்டெடுக்கிறார்கள்..!

குப்பை பொறுக்கும் சிறுவர்கள்
குப்பை மேடுகளில் உதயமாகிறார்கள்..
குப்பை மேடுகளிலிருந்து அஸ்தமிக்கிறார்கள்..!

புழுதிபடிந்த தம் வெற்றுக் கால்களால்
யாரையோ மவுனமாய் அவமதிக்கிறார்கள்..!

இலக்கற்ற பார்வைகளின் மூலம்
அவர்கள் கடவுளர்களை ஏளனம் செய்து
தலைகுனியச் செய்கிறார்கள்…

”அவசியமற்ற குழந்தை பேறுக்கு
ஆணுறை பயன்படுத்துங்கள்”
உரக்க சப்தமிடும் ஒலிப்பெருக்கியை
உன்னிப்பாய் கவனித்தபடியே
இரவுகளை நோக்கி கடந்து செல்கிறார்கள்..

முன்னிரவுகளில்
காரணமின்றி யாரையோ சபித்தபடி
ஒரு தினத்தை நிறைவு செய்கிறார்கள்..
அல்லது
ஒரு தினத்திற்க்கான சூரியனை
கடலுக்குள் மூழ்கடிக்கிறார்கள்…!
எப்போதாவது
உடன் வரும் நண்பனொருவன்
தொண்டைக்குழி கடித்து
குருதியுறுஞ்சுவான்..!

வாரம் இருமுறை
புதர்களில் வல்லுறவு நிகழ்த்தப்பட்ட
பெண்ணொருத்தி நடுச்சாலையில்
வீசியெறியப்படுவாள்….!

பேரம் படியாத பள்ளிச்சிறுவர்களை
தண்டவாளத்தின் ஓரம்
ஞாயிற்று காலைகளில் சீருடையோடு
கண்டெடுக்கலாம்..!

இரவுக்காவலன்
துருப்பிடித்த கத்தி சுழற்றியபடி
உதடுவழியும் ரத்தத்துளிகளோடு
தினமும் வலம் வருவான்..!

உத்தமச்சாயல் தென்படும்
ஓரிருவரையும்
பகலிரவு பாராது
குரைத்துத்தபடி
துரத்தும் தெருநாய்கள்..!

மாதம் ஒருமுறை
பெரும்பொருள் வேண்டி
ஆதிகாளிக்கு ஆண்மகவு
பலியிட்ட தந்தையொருவன்
புன்னகைத்தபடியே
சிறை செல்வான்…!

மற்றபடி
இந்த வீதியில் ஒருவனாய்
வாழ்வதில் எனக்கொன்றும்
முறையீடல் இல்லை…!
ஒரு நீர்க்குமிழி 
உடையும் சப்தமென 
யாருக்கும் சலனமேற்படுத்தாது
வீதியுலவுகிறார்கள்
மனம் சிதைவுற்றவர்கள்..!

சற்றுமுன்புதான்
எனினும்
கடைசியாய் கவனமேற்றிய
சுயம் தொலைத்த ஒருவரை
உங்களுக்கு நிச்சயம்
நினைவிருக்காது..!

அவர்கள்
தன்னுடல் சுற்றிக்கொண்ட
கோணிப்பைகளின் மூலம்
கருணையற்ற இப்பிராந்தியத்தின்
நிர்வாணத்தை மூடுகிறார்கள்…!

உரத்த குரலில்
யாரையோ ஏசியபடி
பீடுநடை போடும் ஒருவன்
ஆழிப் பிரபஞ்சத்தை
அந்நியமாக்கி கொண்டிருக்கிறான்..!

சிறுதடி கொண்டு
தரை தட்டியபடி பயணிக்கும் ஒருவன்
மிச்சம் ஏதேனும்
மனிதம் இருக்கிறதா என
ஆய்வு செய்பவனாய் இருக்கக்கூடும்..!

எச்சில் ஒழுகியபடி
தேநீர் யாசிக்கும் அவளுக்கு
உலகத்தின் உச்ச வெறுப்பு
கொதிநீர் வடிவில்
பரிசளிக்கப்படுகிறது…!

கையில் எதுவுமின்றி
காற்றில் கிறுக்குபவன்
கடவுளுக்கு கடிதம்
எழுத எத்தனிப்பவன் போலும்…!

பொருள் வேட்கையின்
வெம்மை மிகுந்ததொரு வன்பொழுதில்..

இலக்கின்றி நகர்கிற
மனம் புரண்ட ஒருவன் மீது
துரோகித்த ஒரு தோழன்
சாயல் தென்படுகையில்

நீர்க்குமிழி உடையும் சப்தம்
உங்கள் காதுகளுக்கு மட்டும் எட்டி
சலனமேற்படுத்த துவங்குகிறது...!
அலைபேசிகளின்
அரூப சுழற்சியில் 
பயணித்துக் கொண்டிருக்கிறது
நீதியற்ற இந்த வாழ்க்கை…!

மனிதர்கள் இணைத்து
மனிதம் துண்டிக்கிறது
அலைபேசியின் அலைவரிசைகள்..!

ஒரு அழைப்பின் வழியே
அகன்ற நிலநடுக்கம் அனுப்பலாம்..!

ஒரு அழைப்பின் வழியே
இரவாத பெருமகிழ்வு பரிசளிக்கலாம்..!

அறிவிப்பற்ற துண்டித்தலின் மூலம்
எதிர்முனையை நிராகரிக்கலாம்..!
அதன் பொருட்டே அம்முனைக்கு
பெருவலி அளிக்கலாம்..!

தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கும் ஒருவர்
உங்கள் நினைவு எல்லையை
ஆக்கிரமிக்கலாம்..!

ஒரு குறுஞ்செய்தியின் வழியே
எவருக்கேனும் திசை காட்டலாம்..!

ஒரு சொட்டும் வியர்க்காது
நெடுநேரம் விரல்களால்
விளையாடலாம்..!

ஊழி பாவம் கழிதல் வேண்டின்
அலைபேசும் எண் மாற்றி
கணநேரத்தில் புனிதனாகலாம்..!

இயன்றால்..
மொத்த இயக்கமும் நிறுத்தி
சட்டை பற்றியிழுக்கும்
பக்கத்து இருக்கை மழலையோடு
கைகுலுக்கியும் உறவாடலாம்…!

Sunday 10 November 2013





ஆதித்தொழில் செய்யும்
வேசி என்றழைப்பவர்களில்,
பாதிக்கும் மேல்
உன்னுடன் படுக்கையினை
பகிர்ந்து கொண்டவர்கள் என்பதறிவாய்..

ஒவ்வொரு தீண்டலுக்கும்
மலர்பவள் நீ.
ஒரே முறை மலரும்
பூச்சூடிக்கெள்வாய்..

விருந்துக்கு அழைக்கும்
உன் உதட்டுச்சாயம்
இறுதியினை எட்டிக்கொண்டிருக்கும் உன்
ஒரு சொட்டு உதிரத்தினால் ஆனது..

உன் போல்
அதீத அலங்காரங்களால் நிறைத்துக்கொள்ளும்
இச்செவ்வானமும்
உன் போல்
பின்னிரவுகளில் இருளடைந்து விடுகிறது..

தயக்கம் ஏதுமின்றி
நீ ஆடைகள் களைவதற்க்கு,
முதலில் நாணம் களைவது
என்பதுதான் அடிப்படை.

சிதைவு முடிந்து,
சிதைந்த மலர்கள் உதறி,
இன்னொரு சிதைவுக்கு
உன்னை புதுப்பிக்க
வீதியோரத்து ஒற்றைக்கோப்பை
தேநீர் போதுமாயிருக்கிறது…

புறக்காமம் தொலைத்து,
உயிர்க்காமத்து வெளியில்
உன் உணர்வுப்பூட்டுத் திறந்து
உச்சமெட்டும் ஒரு நன்னாளில்
அரைகுறை ஆடை மறந்து
ஆழ்ந்துறங்குவாய்…

புரளும்போது இடறிவிடும்
உன் இடதுகாலால்
தற்செயலாய் உலகினைத் தள்ளிவிடுவாய்..

அந்நாளில்
சுற்றுப்பாதை விலகி
சூரியனை முத்தமிட்டு
செத்தொழியும் இப்பூமி...!

















அந்த அறை உங்களுக்கானது..

எந்த அறைகளின் சாயலுமின்றி
பிரத்தியோகமாக
உங்களுக்கென உருவாக்கப்பட்டது…

உங்களுக்கான அறை
கதவுகளற்றது..
அதனால் பூட்டுதலும்
திறவுகோல் பாதுகாத்தலும்
அவசியமற்றது..

உங்களையன்றி யாருக்கும்
புலப்படாத அறையென்பதால்
நாற்புறத்து சுவர்களற்றது அந்த அறை..

எல்லா வழிகளிலும்
நீங்கள் நுழைய வேண்டியிருப்பதால்
வாசல்களென்று எதுவுமற்றது உங்கள் அறை..

உங்கள் அனுமதியின்றி
ஒளியும் காற்றும் வருவதில்லை என்பதால்
சாரளரங்களும் அவசியமற்றவை..

சம அளவில் சலவைக்கற்களாலும்
சிலந்தி வலைகளாலும்
சூழப்பட்டது உங்கள் அறை..

உங்கள் அறையின்
அலங்கார மலர்களிடமிருந்து
துர்நாற்றம் துயில்கிறது..

அவ்வப்போது
கழற்றி வைக்கப்பட்டிருக்கும் முகமூடிகள்
நறுமணத்தை உற்பத்தி செய்கின்றன..

கழிவு நீர் வழிந்தோடும்
உங்கள் அறையில்
இறுக்கமான உதடுகளும்
இலக்கற்ற வசவுச்சொற்களும்
மிதந்து கொண்டிருக்கின்றது..

வரவேற்பறையில் கிடத்தப்பட்டிருக்கும்
பரிசுப்பொருட்களுக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது
ஏராளமான உயிர்க்கொல்லி ஆயுதங்கள்..

உங்கள் அறையின்
ஒழுங்கற்றத் தன்மையில் மனச்சிதைவுற்று
ஆசுவாசம் கொள்வதற்கென
அதிகம் திறக்கப்படாததொரு
கடவுளுக்கான பகுதியில் நுழைகிறீர்கள்..

அங்கே…
புகைப்படமாய் அசைந்து கொண்டிருக்கிறது
ஒரு மழலையின் சிரிப்பு..!




நட்பு -1

ஏழாவது தளத்திற்க்கு

ஏறிக்கொண்டிருக்கிறேன்..

உரையாடலோடு உடன் வரும் நண்பன்

படிக்கட்டுக்களின் எண்ணிக்கையை

பாதியாக்குகிறான்…!


நட்பு -2


நண்பர்கள் யாருமற்று

தேநீர் அருந்தும்

அனாதைப் பொழுதுகளில்

தற்காலிகமாக

தேநீருடன் நட்பாகிறேன்..

புது நண்பனும் சுவையூட்டுகிறான்...!


நட்பு -3

எது வேண்டுமென அன்னைக்கும்,
எது வேண்டாமென தந்தைக்கும்,
தெரிந்திருக்கிறது..!

எப்போது எது வேண்டுமென்றும்
எப்போது எது வேண்டாமென்றும்
நண்பனுக்கு தெரிந்திருக்கிறது…!.


நட்பு -4

திரைகடலோடி

திரவியம் தேடிய நண்பன்

திரும்பியதும்,

முதலில்

தெருத்தெருவாய் ஓடி

நண்பர்களைத் தேடுகிறான்…!


நட்பு -5

நண்பர்கள் நீருற்றுகிறார்கள்..

நண்பர்கள் உரமிடுகிறார்கள்..

நண்பர்கள் களையெடுக்கிறார்கள்..

உலகெங்கும் செழித்து வளர்கிறது

காதல் பயிர்கள்..!


நட்பு -6

காந்தத்திற்க்கு
எதிரெதிர் துருவம்..

காதலுக்கு
இணையான துருவம்..

நட்புக்கு மட்டும்
எல்லா துருவங்களும்..!

நட்பு -7

சட்டை முனையில்

மடித்து வைத்து

மிட்டாய் கடித்து

பங்கிட்டதிலிருந்து துவங்கி

பகிர்ந்து கொள்வதிலெல்லாம்

சுவையளிக்கிறது நட்பு…!


நட்பு -8


ஒரு நட்பு

அறிமுகமாகிற கணத்தில்

உங்களுக்கு

ஒரு உலகமும்

அறிமுகமாகிறது….!



நட்பு -9


இலைகள் மூடிய

நிழல்மரமாய்

இளைப்பாறுதல் அளித்து

இளைப்பாறல் முடிந்து

வழியெங்கும்

இணைபிரியாத் துணையென

உடன் பயணிக்கிறது நட்பு…


நட்பு -10


இரு விரல் நீட்டி

ஒன்றினைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும்

ஒவ்வொரு நட்பும்

ஒன்றில் நல்லதும்

மற்றொன்றில் மிக நல்லதுமென

எதையோ ஒளித்து வைத்திருக்கிறது..!



நட்பு -11


கடவுள்

உருவமில்லா நம்பிக்கை…!

நட்பு

உருவங்களில்

உலவும் நம்பிக்கை….!


நட்பு -12


நிறைகுடம் அல்ல.

குறைகுடமும் அல்ல.

அன்பை இறைத்து ஊற்றி

நிறைக்கும் குடம்..

நட்பு…!