Saturday 9 November 2013

கையிலிருந்த கைத்தடியை
ஊன்றிக்கொண்டதாக தெரியவில்லை
முதுகு வளையாத அவ்வை..

ஐந்து தலை இருந்த பக்கமாக
கழுத்து வலிக்க சாய்ந்திருந்தார்..
இராவணன்..

தலை சொறிந்த வேகத்தில்
ஒரு காது மட்டும் கழன்று விழுந்தது.
முயலுக்கு..

முன்புறம் கைகட்டி தலைப்பாகையோடு
வேறு திசையில் மேல் நோக்கி நின்றார்.
விவேகானந்தர்..

மீசை முறுக்கியதில் விரல்களில்
ஒட்டிக்கொண்ட மையை
வேட்டியில் துடைக்கிறார் பாரதியார்..

ஆளுக்கொரு வசனம் பேசி முடித்ததும்
அமர்க்களமாய் முடிந்தது ஆண்டுவிழா..

இறுதியாய்..
எல்லோரிடமும் கேட்கப்பட்டது
அந்த பொதுவான கேள்வி..

”நீ வளர்ந்து பெரியவனானதும்
என்னவாக ஆகப்போகிறாய்..?”

இராவணனும், முயலும்
டாக்டராக போவதாக சொன்னார்கள்..

அவ்வையார் 

என்ஜினியர் ஆகப்போவதாகவும்,
விவேகானந்தர் 

ஏரோப்ளேன் ஓட்டப்போதாகவும்
தடுமாறி சொன்னார்கள்..

கடைசியாக 

பாரதியாரிடமும் அதே கேள்வி..

யோசிக்கவேயில்லை.. சட்டென சொன்னார்..

”நான் பெரியவனானதும்
பெரிய பாரதியார் ஆவேன்…”

No comments:

Post a Comment