Monday 11 November 2013

குப்பை பொறுக்கும் சிறுவர்கள்
புன்னகைப்பதில்லை.. 
அல்லது அது 
புன்னகையைப் போலிருப்பதில்லை..!

உடலினும் பெரிதான கோணிப்பை
சுமக்கும் அவர்களிடம்
ஒளிந்திருக்கிறது..!
கோணிப்பையினும் பெரிதான துயரம்..!

பரந்துப்பட்ட குப்பைவெளியில்
கிழிந்த வரைபடங்களையும்
சிதைந்த தெய்வச்சித்திரங்களையும்
கால்களால் விலக்கி
தமக்கான தேசத்தை கண்டெடுக்கிறார்கள்..!

குப்பை பொறுக்கும் சிறுவர்கள்
குப்பை மேடுகளில் உதயமாகிறார்கள்..
குப்பை மேடுகளிலிருந்து அஸ்தமிக்கிறார்கள்..!

புழுதிபடிந்த தம் வெற்றுக் கால்களால்
யாரையோ மவுனமாய் அவமதிக்கிறார்கள்..!

இலக்கற்ற பார்வைகளின் மூலம்
அவர்கள் கடவுளர்களை ஏளனம் செய்து
தலைகுனியச் செய்கிறார்கள்…

”அவசியமற்ற குழந்தை பேறுக்கு
ஆணுறை பயன்படுத்துங்கள்”
உரக்க சப்தமிடும் ஒலிப்பெருக்கியை
உன்னிப்பாய் கவனித்தபடியே
இரவுகளை நோக்கி கடந்து செல்கிறார்கள்..

முன்னிரவுகளில்
காரணமின்றி யாரையோ சபித்தபடி
ஒரு தினத்தை நிறைவு செய்கிறார்கள்..
அல்லது
ஒரு தினத்திற்க்கான சூரியனை
கடலுக்குள் மூழ்கடிக்கிறார்கள்…!

No comments:

Post a Comment