ஒரு
பொதுநுாலகத்து
வாயிலில்
உள்நுழைகிற
உனக்கும் எனக்குமான
இடைவெளி
மிக சொற்பமானது..
அடுக்கி வைத்த
புத்தகங்களை
எதிரெதிர் திசையில்
எடுத்த இடைவெளியில்
சந்தித்தக்கொள்ளும்
நமது கண்களுக்கு
பின்னால்
ஒரு கவிதை
ஒளிந்திருக்கிறது..
இரண்டு
அடுக்குகளுக்கு
ஒருமுறை வீதம்
இருவரும்
கடந்து செல்வதை
தற்செயலென்று
சொல்வதற்கில்லை…
கையிலெடுத்து
புரட்டும் புத்தகம்
எதுவென்பதை
பரஸ்பரம்
அறிந்துகொள்ளும்
ஆர்வம்
பரமபத விளையாட்டிற்கு
ஒப்பானது…
நெடுநேர
தேடல்களுக்கு பின்பு
உனக்கும் எனக்கும்
பிடித்த புத்தகங்களுடன்
வெளியேறுகிறோம்
இருவரும்…
நுாலகத்திற்கு வெளியே
இரவல் புத்தகத்தை
இருவரும்
பறிமாறிக் கொண்ட
காரணம் காட்டி
பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
தேநீர் நேரமொன்று..
சம அளவில் கலந்திருக்கும்
சர்க்கரைக்கும், தேயிலை சாறுக்கும்,
இணையாகவே
அப்போது
சம அளவில் கலந்திருக்கிறது
காதலும், நட்பும்…!
No comments:
Post a Comment