Saturday 9 November 2013

ஓங்கியொலிக்கப்பெற்ற
ஒற்றை வார்த்தையில் துவங்கியது.
ஒரு கலவரம்..

அம்முனையில் 
பெருங்கோபம் நெய்யப்பட்ட
உரத்தக் குரலின்று கிடைக்கப் பெற்றது
ஓர் அதிகார ஆணை..

தலைக்குமேல் உயர்த்தப்பட்ட
தடி பொருத்தப்பட்ட கைகளின்
எண்ணிக்கை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை…

முதலில் நின்றவர்களுக்கே முன்னுரிமை.
அடி வாங்குவதில்..

நிகழ்வினைத் தாமதமாக உணரும்
இரண்டாம் வரிசைக்காரர்களுக்கு
பளபளக்கும் காலணியால்
வேறொரு வைத்தியம் நிகழ்த்தப்பட்டது..

தெருவோர சிறுகற்களும்
இறுகிப்போன கரங்களும் அன்றி
ஆயுதம் வேறொன்றுமில்லை.
இம்முனை எதிர்ப்பாளர்களுக்கு..

மனவுறுதியின் அளவீடற்ற எல்லைகளை
எளிதில் கடந்துவிடுகிறது.
ஆணவத்தால் நிகழ்த்தப்படுகிற
ஆயுத ஆணை..

சகலத்துயரமும் நிகழ்த்தி முடிப்பெற்ற
சூன்யப் பொழுதில்,

உரிமை வேண்டுமென கோரப்பட்ட
பதாகையொன்றில் உறைந்துகிடக்கும்
தோற்கடிக்கப்பட்டவனின் குருதியில்
இன்னும் மிச்சமிருக்கிறது..
ஆயிரமாண்டுகளின் வெப்பம்….!

No comments:

Post a Comment