Thursday 7 November 2013






அண்டை வீட்டுக்காரன் அவன்..

மண்டையோடுகள் கோர்த்து
மாலையணிந்து கொண்ட பேரழகன்..

எம் தமக்கை ஒருவளை கற்பழித்ததன்
அடையாளமாய் தாவணி உருவி
தோளில் சுற்றிக்கொண்ட
சுந்தர வதனன்…

அவன் உதடுகளில்
எப்போதும் புகைந்துகொண்டிருக்கும்..
எம் தம்பியொருவனின்
துண்டிக்கப்பட்டதொரு உறுப்பு…

எங்கள் வீடுகளுக்கு வந்து போகிற
சிட்டுக்குருவிகளை
வேட்டையாடி விளையாடுதல் அவனது
சுகமானதொரு பொழுதுபோக்கு..

என் தமையனின்
கண்களை முன்னால் கட்டி
கைகளை பின்னால் கட்டி
புறமுதுகில் சுடுகின்ற
ஆண்மைத்தன விளையாட்டுகளில்
ஆழ்ந்த அனுபவம் கொண்டவன்..

என் தங்கைகளின்
மார்பு கிழித்து
மஞ்சள் நிறத்தில் ஏதும்
ரத்தம் வருகிறதா என
சந்தேகம் தீர்த்து கொள்கிற
சந்தோஷ விளையாட்டுக்காரன்..

இவன் ஆலகால விளையாட்டுகளுக்கு உன்
அன்னை ஒன்றும் சொன்னதில்லையா.?
எனக் கேட்கிறீா்கள்..

அடிக்கடி சொன்னதுண்டு..
அவசியம் சொல்கிறேன்..

என் உறவுகளின்
விரல்களுக்கு வலிக்காமல்
நகம் பிடுங்கி விளையாடுமாறு
ஆண்டு முழுவதும்
அவனுக்கு
அறிவுறுத்தியிருக்கிறாள்...

ஒரு கண்ணை குருடாக்கிவிட்டு,
மறுகண்ணை
மறுதினம்தான் தோண்டவேண்டுமென,
அச்சுறுத்தும் வகையில்
ஆணையிட்டிருக்கிறாள்..

குண்டெறிகிற விளையாட்டுகளில்,
ஆயிரம், இரண்டாயிரமென்று கொஞ்சமாய்
உயிரிழப்பு நடந்தால்,
சிறப்பு பூஜையிட்டுதான்
புதைக்க வேண்டுமென
நல்லிணக்கத்துடன்
சொல்லியிருக்கிறாள்..

அண்டை வீட்டுக்காரனுடன் உன்
அன்னைக்கென்ன தொடா்பென கேட்கிறீர்கள்..?

அதெல்லாம் சொல்வதற்க்கில்லை..

வாசலுக்கு வெளியே நாங்கள்
விலங்கிட்டு கிடப்பதால்,
பின்வாசல் ரகசியங்கள்
முன்னுக்கு வருவதே இல்லை..

அப்புறம்..

”கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்குமென,
காதலனுடன் சேர்ந்து
பிள்ளைகளைக் கொன்ற தாய்” என்று
பத்திரிகை செய்தி ஏதேனும் பார்த்தால்,
பதட்டமடையாதீர்கள்..

நடிகை ஒருவள்
இடுப்புக்கு கீழே
இறங்கிப்போகும் உடையோடு
இருக்கும் பக்கத்திற்க்கு
இயல்பாக தாவிவிடுங்கள்….!

No comments:

Post a Comment