Saturday 9 November 2013






ஒரு தினம் அரசனாயிருக்க
ஆசீர்வதிக்கப்பட்டேன்..

அறிந்திராத அணிகலனும்
கேள்வியுறாத மேலாடையுமென
துவங்கியது நகர வீதியுலா..

தெருவோரத்து புல்வெளியில்,
தேகத்தில் ஆடையற்றுக் கிடந்த
சிறுவனுக்கு,
தேரிலிருந்து இறங்கி,தெருவில் நடந்து,
மேலாடை கழட்டி
மேனி மூடிப் போகிறேன்..

தகுதியற்ற செயல் இதுவென்று
தலையிலிருந்த கிரீடம்
பறிக்கப்பட்டது…

பிறிதொருநாள்
யாசகனாயிருக்க ஆசீர்வதிக்கப்பட்டேன்..

அவலட்சண ஆடையணிந்து,
அலைந்த உடல் மடிந்து,
வீதியெங்கும் கால் அலைந்து,
அகண்ற பாத்திரம் நிறைத்த உணவை,

வயிறு சுருங்கி, விழி இடுங்கி,
வழியில் நின்ற சிறுமிக்கு
பாதியென்று பகிர்ந்தேன்..

தகுதிக்கு மீறிய செயல் இதுவென்று
அகண்ட பாத்திரம் பிடுங்கப்பட்டு,

அதனினும் சிறிதாய்
உடைந்த பாத்திரம் ஒன்று கொடுக்கப்பட்டது….

வேறொரு தினம்
கடவுளாயிருக்க ஆசீர்வதிக்கப்படும்
நாளுக்கென காத்திருக்கிறேன்..!

No comments:

Post a Comment