Saturday 9 November 2013

அகல நீளமெல்லாம்
அவரவர் வசதிகளுக்கு உட்பட்டது..
ஆயினும்
எல்லோருடைய மீன் தொட்டிகளும்
எல்லா பக்கத்திலும் 

அடைக்கப் பட்டிருக்கிறது..

நிர்ணயிக்கப்பட்ட துாரம் வரை நீந்தி
பின் திரும்பி…
பின் நீந்தி..
ஒரு ஊசலின் 

விசையினைப் போலிருக்கிறது.
உள்ளிருக்கும் மீன்களின் வாழ்க்கை..

பாறை படர்ந்த பாசிகளை தின்று,
புழு கோர்த்த துாண்டிலில் அறிவற்று
அகப்பட்டுக் கொள்வதை மறந்து,
அவ்வப்போது துவப்படும் கடுகளவு
உணவு துாற்றலுக்கு காத்திருக்க
கற்றுக் கொண்டிருக்கிறது அம்மீன்கள்…

உள்ளீடப்பெற்ற எந்திரம் உமிழும்
நீர்க்குமிழ்களில் அவைகளுக்கு எந்த
உயிர்க்காற்றும் கிடைப்பதில்லை..

செயற்கை செடிகளின்
அச்சிடப்பட்ட பச்சை வர்ணங்கள்
அவைகளுக்கு மூச்சுமுட்டுவதை
எவரும் அறிவதில்லை..

கண்ணாடித் தொட்டிலிருக்கும்
வண்ண மீன்களுக்கு
இரவின் இருள் என்பது
எப்போதோ நினைவிலிருந்து
அகற்றப் பட்டுவிட்டது..

உள்ளிருக்கும் எல்லா மீன்களும்
தண்ணீரில் நீந்திக் கொண்டிருப்பதாக
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..


உங்கள் சுயநலத்தில்
நீந்திக் கொண்டிருப்பதாக
அவைகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன…!

No comments:

Post a Comment