Sunday 10 November 2013

களவாடப்படும் முன்
கடைசி ஆசை எதுவென்று
அரசலாற்று மணலிடம்
அரை மனதோடு கேட்கப்பட்டது..

இறுதியாய் ஒருமுறை
தாவணிப்பெண்கள்
தன்மீது பாண்டியாட வேண்டுமென
தண்ணீர் மல்க கேட்டது மணல்..

தாவணிப்பெண்கள்
வேற்றுடைக்கு மாறி
சடுகுடு விளையாட
துாரதேசம் போயிருப்பதாய்ச் சொல்லி,

கடைசி ஆசை
கண்ணியமாக மறுக்கப்பட்டு
மரணமளிக்கப்பட்டது மணலுக்கு..

ஆறும்,
கடற்கரையுமற்ற
அனாதை நகரமொன்றில்,

வீடுகட்டுவதற்கென
வீதியில் கொட்டப்பட்ட மணற்குவியலில்,
தெருவோரச் சிறுமிகள்
வீடுகட்டி விளையாடி
குதித்து சறுக்கி மகிழ்ந்ததும்

மீண்டு, உயிர்த்தெழுந்து,
மீண்டும் கண்மூடியது அம்மணல்..

No comments:

Post a Comment