Saturday 9 November 2013







மௌனம் பற்றிய
உங்களது அளவீடுகள்
வெகு சாதாரணமானவை..!

உங்கள் சுய பாதுகாப்புக்கென
அதை பயன்படுத்திக்கொள்கிறீர்கள்..!

உங்களது பெருவெற்றிக்குப் பிறகான
நிலைப்பாடாய்
அதை காட்சிக்கு வைக்கிறீர்கள்..

உங்கள் அறியாமை இருளுக்கு
வர்ணமாய் அதை பூசிக்கொள்கிறீர்கள்..!

மௌனத்தின் மூலம் நீங்கள்
பக்குவப்பட்டுவிட்டதாக
உலகுக்கு அறியத்தருகிறீர்கள்..

தனித்துவிடுகிற உங்கள் கருத்துகளுக்கு
கவசமென அதை அணிகிறீர்கள்..!

மௌனத்தின் சிற்றின்பங்களுக்குள்
திருப்தியடைகிற நீங்கள்
மௌனத்தின் எதிர் வினைகள் குறித்த
விவாதங்களை ஏற்பதாக இல்லை..!

மாறாக உங்கள் கதவுகளை
இன்னும்
இறுக்கமாக மூடிக்கொள்கிறீர்கள்..!

என்றேனும் உங்கள் நீண்ட மௌனம்
உடையும் தருணத்தில்..

உங்கள் பாதுகாப்பும் உடையலாம்.
அறியாமை வெளிச்சமிடப்படலாம்..
சிறுபிள்ளைத்தனம் நிரந்தரமாகிவிடலாம்…
உங்கள் கருத்துக்கள் துாக்கிலிடப்படலாம்…
இயல்பு வர்ணங்கள் நீர்த்துப் போகலாம்…

உங்கள் ஆதார ஆயுதம்
பலனற்றுப் போனதென்று
உணர்கிற பொழுதுகளில்..

கூக்குரலிடும் உங்கள் வார்த்தைகளை
உதறிவிட்டு
மௌனமாய் கடந்து போகும்
உலகினை நீங்களும் மௌனமாகவே
பார்த்துக் கொண்டிருக்கலாம்..

வேறு வழியின்றி...!

No comments:

Post a Comment