Sunday 10 November 2013





யுத்தக் களத்திலிருந்து
வருகிறேன்..

அங்கே
ஒரு இணைப்பறவை இறந்து கிடந்தது..
இன்னொரு பறவை
இரைதேடிக் கொண்டிருந்தது..

இரு கைகளற்ற
உடலொன்றின்
இருகால்கள்
நீர் தேடி நகர்ந்து கொண்டிருந்தது..

உடைகள் அவசியமற்ற
நிர்வாண உடல்கள்
தரைபரப்பி
கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது..

வேரில் அமிலமூற்றப்பட்ட
மரமொன்று
இலைகளோடு சேர்த்து
கிளைகளையும் உதிர்த்து
கீழ்விழக் காத்திருந்தது…

உறுப்புகள் வீசியெறியப்பட்ட
ஆழ்கிணற்றிலிருந்து
மெல்ல மெல்ல
உயர்ந்தெழுந்தது குருதி ஊற்று..


நான்
யுத்தக் களத்திலிருந்து வருகிறேன்..

எதை எதை இழந்தேன் என்று
எண்ணிப்பார்க்க நேரமில்லை…

கருப்பையினுள் ஓர் உயிரோடு
வாயிலில் கிடத்தியிருக்கிறேன்
என் மனைவியை..

வயிற்றுக்கு உணவிடுங்கள்..

என்றேனும் யாம் போரிட வேண்டுமெனில்
எங்கள் வயிற்றுக்கு
இன்றேனும் நீங்கள் சோறிடவேண்டும்..!.

No comments:

Post a Comment