Sunday 10 November 2013

அவநம்பிக்கையை அடித்தளமிட்டு,
ஆகப்பெரும் வேகத்தோடு
எழுப்பிக்கொண்டிருக்கிறாய்..!
உன் சுவர்களை..

சுற்றுச்சுவர் எழுப்பிக்கொள்வதன் மூலம்,
சுதந்திரமடைந்து விடுவதாக
எண்ணிக்கொள்கிறாய்..

நிர்மாணிக்கப்பட்ட சுவர்களால்,
நிச்சயிக்கப்படும் வெற்றிடத்தை,
நீ அறியாதிருக்கிறாய்..
அல்லது,
அறிந்ததும் அலட்சியமாயிருக்கிறாய்..

எதிரானவர்களுக்கு
எதிர்வினையாற்றாது,
சுவர் மூடிக்கொள்வதன் மூலம்,
எதிர்வினையை
உன்மீதே திருப்பிக்கொள்கிறாய்..

அடைக்கப்பட்ட சுவர்களின் மீது,
அமைக்கப்பட்ட தற்செயல் சாரளங்களை
பிறழ்மனத்தின் கைகொண்டு
கதவடைத்துவிடுகிறாய்…

நாற்புறமும்
கட்டிமுடிக்கப்பெற்ற
உனக்கான சுவர்களால்,
உலகத்தை துண்டித்துவிட்டதாக
பெருமகிழ்வு கொள்கிறாய்..

உன்னைத் துண்டித்துவிட்ட
எந்தச்சலனமும் அன்றி
இயல்பாகவே இயங்குகிறது
எல்லோருக்குமான உலகம்….!

No comments:

Post a Comment