Friday 8 November 2013






சாரங்கபாணி என்றுதான்
பெயர்.
தமிழாசிரியர் ஆனதும்
தமிழ்மணி ஆனார்..!

சாயங்கால சூரியனுக்கு
சாயம் போனதாய்
மஞ்சள் நிற சட்டை..

கறை கழுவி
சலவை செய்த நிலவென
வெள்ளையில் வேட்டி..

நெடுங்காலம்
நினைவுக்குள் அகலாத
அவரது நிரந்தர அடையாளம்..

தானமும் கர்ணனும்,
என ஒப்புமையிட்டால்
தமிழ்மணியும் வேட்டியும்,
என உவமையிடலாம்..

வேட்டி கட்டியவன்
வேடிக்கைத்தமிழன் என
வீண் கருத்து சொல்பவர்களை,
வேண்டாத தமிழன் என்பவர்..

யாரும் எதிர்பாராது
ஒருநாள்
சட்டென நிகழ்ந்தது
அவரது விருப்ப ஓய்வு..

மகள்களுக்கு திருமணம்,
மகனுக்கு வேலைவாய்ப்பு என
சேமித்த செல்வமெல்லாம்
செலவாகிப்போனதில்,
செல்வராயிருந்தவர்
செல்லாதவரானார்…

ரத்த சொந்தங்கள் எல்லாம்
ரத்தம் குடிக்கும் பூச்சியாய்
சொத்து முழுதும் உறிஞ்சிவிட,

தமிழ்மணியிடம்
மிச்சமிருந்தது..,
வாழ்க்கை கொடுத்த தமிழும்,
வாழ்க்கை கெடுத்த வறுமையும்..

பின்னொரு நாளில்,..

நகரத்து வீதியில்
நகராத கூட்டமிருக்கும்
நகைக்கடை ஒன்றில்
இரவுக்காவல் வேலையொன்று
இருப்பதாக காதுக்கு
கசிந்தது ஒரு தகவல்…

விடியும் வரை
உறங்காமலிருப்பது
அடிப்படை தகுதி

நல்லது..
வறுமைக்கு பிறகு
வளமையோடு சேர்த்து
தொலைந்துபோன உறக்கம்
வசதியாயிருந்தது...

அடுத்த தகுதிதான்
அச்சமூட்டியது.

கணுக்கால் வரையிலான
கால்சட்டை அவருக்கு
கட்டாய சீருடை என்பது
தங்கச்சிலையின் தலைக்கு
தகரத்து கிரீடமாய்
ஒட்டாத உறுத்தலாயிருந்தது…

”போகும்” வரை வேட்டி
என்றிருந்தவர்
பொருளாதார நிலை
புறந்தள்ளியதில்
மாறினார்..

ஒரு வாரம்
மட்டும்
ஓடியிருக்கும் அவரது
இரவுக்காவல் காலம்..

நிலவு துாங்கியெழுந்த
ஒரு முன்னிரவில்,

நிச்சயிக்கப்பட்ட மரணத்தை
நீட்டிக்க விரும்பாது
சட்டென கட்டிக்கொண்டார்…
வீட்டிற்க்கு வரும் விருந்தாளியை
வீதிக்கே சென்றழைக்கும்
விருந்தோம்பும் பண்பு அது.…

துாக்கில் தொங்கினார் தமிழ்மணி..
துாக்கு கயிறாய் தொங்கியது
அவரது வேட்டி…!

2 comments:

  1. வாழ்த்துக்கள் தங்களின் வலை பக்கத்துக்கும் அருமையான கவிதைக்கும் அரங்கன் தமிழ்..:)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி.. கமலி பன்னீர் செல்வம்.. நன்றி.. :)

      Delete