Saturday 9 November 2013

ஒரு கவிதைக்கான
முதல் வார்த்தையை தேடி
அலைந்து கொண்டிருந்தேன்..

தரையிலிருந்து மேலெழும்பிய
ஒரு வண்ணத்துப் பூச்சியினையும்,

பெருநீர்ப் பரப்பில்,
மென்வயிறு உரச
சிறகடித்து பறந்ததொரு
பறவையினையும்,

வெற்று காகிதத்தில்
நீள் நாக்கு துழாவி,
மிச்சமிருக்கும் உணவைத் தேடும்
இளைத்த பசுவினையும்,

பயண ஜன்னலுக்கு வெளியே,
இறந்து போன பூச்சரம்
வீசிய வளையல் கரத்தையும்,

நிராகரிக்கப்பட்டு,
தலைகவிழ்ந்து
மௌனமாய் திரும்பும் யாசகனையும்,

அடம்பிடித்து அழும் மழலையை,
ஆவின் பாலுடன் ஆற்றுப்படுத்தும்
தந்தையினையும்,

கடந்து வந்துவிட்ட
இந்த இரவில்,

ஒரு கவிதையின்
கடைசி வார்த்தைக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்..!

No comments:

Post a Comment