Saturday 9 November 2013






மூன்றாம் தலைமுறையில்
கோசலையாயிருந்து,
தலைநரை எட்டியிருக்கும்
தந்தையின் காலத்தில்
கோசலையம்மாளாக இருந்தவள்..
எங்களுக்கு
கோசலைப் பாட்டியாயிருக்கிறாள்..

இறுதி வரையிலும்,
புகைப்படம் எதற்க்கும்
முகம் காட்டியதில்லை அவள்..

அபூர்வமாய்
அக்காவின் திருமணத்தில்
மெத்தப்பயந்து, முகம் வெளிறி,
சுவர் வெறித்து நின்ற

கோசலையப்பாட்டியை,

தோள் வரையில் சதுரமாய் வெட்டி,
இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கூட்டி,
கண்களில் கசியும் நீர்
காட்சி பிம்பத்தை அசைக்க,
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிக்கு
காணிக்கை கொடுத்திருக்கிறேன்…

சாயுங்காலத்திற்கெல்லாம்
தன் முகம் ஊர் முழுக்க பிரபல்யமாகும்
எனத்தெரிந்தால்,

கோசலைப்பாட்டி
முகத்தை துாக்கி வைத்துக்கொண்டு,
குறைந்தது மூன்று நாளைக்காவது
பட்டினியோடு பேசாமல்
படுக்கையில் கிடப்பாள்..!

No comments:

Post a Comment