Saturday 9 November 2013







உன் குறுஞ்செய்திகளால்
நிரம்பி வழிகிறது..
என் அலைபேசியின் உள்ளுறை பெட்டி..

புலர்ந்த காலை மகிழ்வாக ஒன்றும்
நிறைந்த இரவு இனிதாக ஒன்றுமென
உன் குறுஞ்செய்திகளின் கடமை
கதிரொளியின் தினப்பணி…

நலம் பெற வேண்டிய குறுஞ்செய்திகள்
உன் பூஜையறையிலிருந்து
புறப்பட்டு வந்தவை..

வெற்றிக்கு வாழ்த்திய செய்திகள்
பாதி பங்களிப்புகள்..

தத்துவம் பேசிய செய்திகளில்
சப்தமில்லாமல் என்னை
பக்குவப்படுத்துகிறாய்…

உன் வாழ்த்துச் செய்திகளுக்குப் பின்தான்
துவங்குகிறது
என் பண்டிகைக் கொண்டாட்டம்..!

உள்ளிடப்பெற்ற எழுத்துருக்களில்,
ஒத்திசைவாய் தோற்றமளிக்கும்
உன் ஒவ்வொரு செய்தியிலும்,
உள்ளிடப்பட்ட புன்னகை
என் உதடுகளுக்கும் இடம் மாறுகிறது…

பதிலுரைக்கும் என் குறுஞ்செய்தி
பலன் எதிர்பாராத
உன் கனிவுச் செய்திகளுக்கு,
வெறும் சம்பிரதாயம் மட்டுமென்பது
இருவருக்கும் தெரிந்திருக்கிறது…

பனித்துளி குளுமை..
மலர் வாசம்..
போர்வை கதகதப்பு..
மழலை புன்னகை..
கரையோர காற்றென
எல்லாமுமாய் இருக்கிறது
உன் குறுஞ்செய்தி…

அறிமுகச் சந்திப்பில்,
பரஸ்பரம் பரிசளித்த
உன் கைக்குட்டையின்
கருநீலத்தில் கையொப்பமிட்ட
”வாழ்நாள் வாழ்த்துக்களுக்கு”
சற்றும் சளைத்ததேயில்லை..
உன் சளைக்காத குறுஞ்செய்திகள்.….!

No comments:

Post a Comment