அந்த அறை உங்களுக்கானது..
எந்த அறைகளின் சாயலுமின்றி
பிரத்தியோகமாக
உங்களுக்கென உருவாக்கப்பட்டது…
உங்களுக்கான அறை
கதவுகளற்றது..
அதனால் பூட்டுதலும்
திறவுகோல் பாதுகாத்தலும்
அவசியமற்றது..
உங்களையன்றி யாருக்கும்
புலப்படாத அறையென்பதால்
நாற்புறத்து சுவர்களற்றது அந்த அறை..
எல்லா வழிகளிலும்
நீங்கள் நுழைய வேண்டியிருப்பதால்
வாசல்களென்று எதுவுமற்றது உங்கள் அறை..
உங்கள் அனுமதியின்றி
ஒளியும் காற்றும் வருவதில்லை என்பதால்
சாரளரங்களும் அவசியமற்றவை..
சம அளவில் சலவைக்கற்களாலும்
சிலந்தி வலைகளாலும்
சூழப்பட்டது உங்கள் அறை..
உங்கள் அறையின்
அலங்கார மலர்களிடமிருந்து
துர்நாற்றம் துயில்கிறது..
அவ்வப்போது
கழற்றி வைக்கப்பட்டிருக்கும் முகமூடிகள்
நறுமணத்தை உற்பத்தி செய்கின்றன..
கழிவு நீர் வழிந்தோடும்
உங்கள் அறையில்
இறுக்கமான உதடுகளும்
இலக்கற்ற வசவுச்சொற்களும்
மிதந்து கொண்டிருக்கின்றது..
வரவேற்பறையில் கிடத்தப்பட்டிருக்கும்
பரிசுப்பொருட்களுக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது
ஏராளமான உயிர்க்கொல்லி ஆயுதங்கள்..
உங்கள் அறையின்
ஒழுங்கற்றத் தன்மையில் மனச்சிதைவுற்று
ஆசுவாசம் கொள்வதற்கென
அதிகம் திறக்கப்படாததொரு
கடவுளுக்கான பகுதியில் நுழைகிறீர்கள்..
அங்கே…
புகைப்படமாய் அசைந்து கொண்டிருக்கிறது
ஒரு மழலையின் சிரிப்பு..!
No comments:
Post a Comment