Sunday 10 November 2013





ஆதித்தொழில் செய்யும்
வேசி என்றழைப்பவர்களில்,
பாதிக்கும் மேல்
உன்னுடன் படுக்கையினை
பகிர்ந்து கொண்டவர்கள் என்பதறிவாய்..

ஒவ்வொரு தீண்டலுக்கும்
மலர்பவள் நீ.
ஒரே முறை மலரும்
பூச்சூடிக்கெள்வாய்..

விருந்துக்கு அழைக்கும்
உன் உதட்டுச்சாயம்
இறுதியினை எட்டிக்கொண்டிருக்கும் உன்
ஒரு சொட்டு உதிரத்தினால் ஆனது..

உன் போல்
அதீத அலங்காரங்களால் நிறைத்துக்கொள்ளும்
இச்செவ்வானமும்
உன் போல்
பின்னிரவுகளில் இருளடைந்து விடுகிறது..

தயக்கம் ஏதுமின்றி
நீ ஆடைகள் களைவதற்க்கு,
முதலில் நாணம் களைவது
என்பதுதான் அடிப்படை.

சிதைவு முடிந்து,
சிதைந்த மலர்கள் உதறி,
இன்னொரு சிதைவுக்கு
உன்னை புதுப்பிக்க
வீதியோரத்து ஒற்றைக்கோப்பை
தேநீர் போதுமாயிருக்கிறது…

புறக்காமம் தொலைத்து,
உயிர்க்காமத்து வெளியில்
உன் உணர்வுப்பூட்டுத் திறந்து
உச்சமெட்டும் ஒரு நன்னாளில்
அரைகுறை ஆடை மறந்து
ஆழ்ந்துறங்குவாய்…

புரளும்போது இடறிவிடும்
உன் இடதுகாலால்
தற்செயலாய் உலகினைத் தள்ளிவிடுவாய்..

அந்நாளில்
சுற்றுப்பாதை விலகி
சூரியனை முத்தமிட்டு
செத்தொழியும் இப்பூமி...!

No comments:

Post a Comment