Friday 8 November 2013



எளிதாய் கிடைப்பதால் 
நட்பின் இறைநிலை அறியாத
தலைமுறை எச்சம் நான்...!

காதல் பற்றி எழுதி 

காதலிக்கு காட்டிய நான்
நட்பு பற்றி எழுதி 

நண்பர்களிடம் கூட காட்டியதில்லை.

காத்திருக்க வைத்ததற்கு
மன்னிக்க சொல்லி
காதலியிடம் மண்டியிட்ட 

கெஞ்சல் கணங்களில் எல்லாம்
நட்புக்கு மட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி
குற்றம் செய்திருக்கிறேன்...!

நானே மறந்த என் பிறந்த நாளுக்கு
நள்ளிரவு வாழ்த்து சொன்ன ,
யாருடைய பிறந்த நாளும்
எனக்கு நினைவிருந்தது இல்லை..

காதல் நொறுக்கிய காலங்களில்,
மதுக்கோப்பை நீட்டாது,
தேநீர் கோப்பை திணித்து
தெளிவு தந்தது நட்பு..

நிலையிழந்த காலங்களில் மகுடமும்,
சிறகிழந்த காலங்களில் இறகும் தந்தது நட்பு..

நினைவு தெரிந்த நாள் முதலான நட்புக்கு
நினைவுக்கு தெரிந்து எதுவும் செய்ததில்லை நான்..

ஏதேனும் ஒரு காரணம் காட்டி
எப்படியேனும் கேட்கவேண்டும்
குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு..

அதற்கும் கூட..


”நமக்குள் என்ன மன்னிப்பு..?
மன்னிப்பு கேட்டதற்காக மன்னிப்பு கேள் ”
என்றுகூட கோபிக்கலாம்

அந்த உயரிய நட்பு....!

No comments:

Post a Comment