Monday 11 November 2013

ஒரு நீர்க்குமிழி 
உடையும் சப்தமென 
யாருக்கும் சலனமேற்படுத்தாது
வீதியுலவுகிறார்கள்
மனம் சிதைவுற்றவர்கள்..!

சற்றுமுன்புதான்
எனினும்
கடைசியாய் கவனமேற்றிய
சுயம் தொலைத்த ஒருவரை
உங்களுக்கு நிச்சயம்
நினைவிருக்காது..!

அவர்கள்
தன்னுடல் சுற்றிக்கொண்ட
கோணிப்பைகளின் மூலம்
கருணையற்ற இப்பிராந்தியத்தின்
நிர்வாணத்தை மூடுகிறார்கள்…!

உரத்த குரலில்
யாரையோ ஏசியபடி
பீடுநடை போடும் ஒருவன்
ஆழிப் பிரபஞ்சத்தை
அந்நியமாக்கி கொண்டிருக்கிறான்..!

சிறுதடி கொண்டு
தரை தட்டியபடி பயணிக்கும் ஒருவன்
மிச்சம் ஏதேனும்
மனிதம் இருக்கிறதா என
ஆய்வு செய்பவனாய் இருக்கக்கூடும்..!

எச்சில் ஒழுகியபடி
தேநீர் யாசிக்கும் அவளுக்கு
உலகத்தின் உச்ச வெறுப்பு
கொதிநீர் வடிவில்
பரிசளிக்கப்படுகிறது…!

கையில் எதுவுமின்றி
காற்றில் கிறுக்குபவன்
கடவுளுக்கு கடிதம்
எழுத எத்தனிப்பவன் போலும்…!

பொருள் வேட்கையின்
வெம்மை மிகுந்ததொரு வன்பொழுதில்..

இலக்கின்றி நகர்கிற
மனம் புரண்ட ஒருவன் மீது
துரோகித்த ஒரு தோழன்
சாயல் தென்படுகையில்

நீர்க்குமிழி உடையும் சப்தம்
உங்கள் காதுகளுக்கு மட்டும் எட்டி
சலனமேற்படுத்த துவங்குகிறது...!

No comments:

Post a Comment