Saturday 9 November 2013








**விரிவாக்கப்பட்ட தொழில் நகரம்**


சலவைக்கற்களால்
சதுரவெளியாக்கப்பட்டிருந்த
இந்த அறை,
சீரற்ற புல்வெளிகளால் நிறைந்திருந்தது..

குளிரசாதனப் பெட்டி
பொருத்தப்பட்டிருக்கும்
இந்த வலப்பக்கச் சுவற்றில்,
வேப்பமரம் ஒன்று
காற்றை வடிகட்டி அனுப்பிக்கொண்டிருந்தது..

கொடுமுகம் காட்டி
பணியாளன் ஒருவனை தண்டித்த
இந்த எதிர் இருக்கையில்,
ஓநாயொன்று சிறுமுயலை
வேட்டையாடிக் கொண்டிருந்தது…

உணவு புசித்து
உடற்பசியாறிய
இந்த ஜன்னலோர மேசையில்,
வண்ணத்துப் பூச்சிகள் இரண்டு
இறுதியாய் புணர்ந்து கொண்டிருந்தன..

அனுமதியோடு உள் நுழையச் சொன்ன
இந்த அலுமினியக் கதவில்,
ஆடு மேய்க்கும் சிறுமி ஒருவள்
பூப்பெய்தியிருந்தாள்…

அண்டத்தின் ஒலிலைகள் அடங்கி,
நிசப்தம் நிறையப் பெற்ற முன்னிரவில்,

அலுவலகத்து அலங்கார மேசையில்
அரைபாகம் நீர் நிரப்பப்பெற்ற
கண்ணாடிக் குடுவையில்,

முக்காலடியினும் கீழ் வளர்ந்த
மூங்கில்மர சிற்றிலையின்
அனல் கக்கும் கேள்விகளுக்கு,
பதிலேதுமின்றி கைகட்டி
அமைதியாயிருக்கிறேன்…!

No comments:

Post a Comment